Saturday, December 27, 2014

சாகாக்கல்வி - 6



சரி, இதுவரை நாம் சாகாக்கல்வியின் அடிப்படையை தெரிந்துக் கொண்டோம். இந்த கல்வியை எவ்வாறு பயில்வது என்பதைப் பற்றி பார்ப்போம். சன்மார்க்கம் என்ற பள்ளியில் மட்டும் தான் இதை கற்க முடியும். இதற்காக நீங்கள் எங்கேயும் செல்ல வேண்டாம் யாரையும் பார்க்கவேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் கற்க முடியும். உலகியலே சன்மார்க்க பள்ளி என்பதை புரிந்துக்கொண்டால் போதும். மற்றவற்றை திருவருள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும். சரி,

முதல் பாடம்.


சாகாக்கல்வியை அடைய இரண்டு வழிகள் உள்ளன. அவை,

  • பர உபகாரம்.
  • சத்விசாரம்.

பர உபகாரம் =          தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ்செய்வது.
சத்விசாரம்     =          ஆன்ம நேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது.
இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெறவேண்டும்.

என்ன தெய்வங்களா ஏதாவது புரியுதா. சரி வாங்க மேலே போய் பார்ப்போம். இந்த முதல் பாடத்தில் நாம் பெறப்போவது. பிரம்மனின் ஆயுட் காலத்தை. ஆச்சிரியமாக இருக்கின்றதா! முதல் படியிலே நமக்கு பிரம்மாவின் வயது, இதை நான் சொல்லவில்லை. நமது வல்லாளன் சொல்கிறார். இதோ..

  • ஜீவகாருண்யத்தால்               -           பிரம்மன் ஆயுசும்,
  • பாச வைராக்கியத்தால்        -           விஷ்ணு ஆயுசும்,
  •  ஈசுர பக்தியால்                          -           ருத்திரன் ஆயுசும்,
  • பிரம்ம ஞானத்தால்                 -           என்றும் அழியாத சுவர்ண         தேகத்தையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

இத்தனை சக்தி வாய்ந்த ஜீவகாருண்யம் என்றால் என்ன.


முன்பு சொன்ன பர உபகாரமும் + சத்விசாரமும் சேர்ந்தது தான் ஜீவகாருண்யம்.

இதைதான் நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்றோமே என்று சொல்கின்றீர்களா.

  •  இல்லாதவருக்கு கொடுப்பதும், தினமும் கடவுளையும் கும்பிடுகின்றோமே.

இங்கே தான் நீங்கள் உண்மையை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.


தர்மம் என்பது வேறு ஜீவகாருண்யம் என்பது வேறு. இரண்டிற்கும் ஒரு சிறு வேறுபாடு தான் உள்ளது. அதை புரிந்துக் கொண்டால் போதும்.

  • வினை (நன்மையும், தீமையும்) அந்த ஆன்மாவையே சேரும் என்று முன்பே பார்த்தோமல்லவா, அதைப்போல் திருவருள் நம்மை வினையை கொண்டே இயக்குகிறது என்பதையும் பார்த்தோமல்லவா, அப்படி என்றால் உதவியும் செய்யவேண்டும், அதே சமயம் வினையும் ஏறக்கூடாது. எப்படி,

சரி, தர்மம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

  •   தர்மம் என்பது பிற உயிர்களுக்கு கொடுத்தல்.
  •  
  • அது உடலாலும், மனதாலும், பொருளாலும் கொடுப்பது.
  •  
  • இது பல வகை பட்டிருக்கின்றது. அவை ஜீவ தர்மம், குல தர்மம், சாஸ்திர தர்மம், ஆசார தர்மம், ஆசிரம தர்மம், ஜாதி தர்மம் இன்னும் பலவாக தொடரும்…

இந்த வகையில் தருமம் செய்யும் போது அதற்கான பலன் நம்மை வந்து அடையும். அதைப்போல் உதவி செய்யும் போது அவரை விட நாம் உயர்ந்தவர் என்ற என்னம் தோன்றும். இதனால் தான் கர்ணன் தன் கை உயரக்கூடாது என்று அவர்களையே எடுத்துக் கொள்ள சொல்வார். இதனாலும் நமக்கு பிறவிகள் தொடரும்.


அப்படி என்றால் ஜீவகாருண்யம் என்றால் என்ன. அதையும் பார்ப்போம். இதோ…


  •  பிறருக்கு கொடுப்பதை தருமம் என்கின்றோம்
  • நமக்கு நாமே செய்துக்கொள்வதை என்ன என்று சொல்வோம். அதற்கு என்ன பெயர். 
  • அதைப்போல இங்கே யாரும் சும்மா தர்மம் செய்வதில்லை. வினைக்கீடாய் திருவருள் நம்மை இயக்கும் போது நம்மிடம் யாரும் எதுவும் கேட்கமுடியாது, பேசமுடியாது, பார்க்கமுடியாது, ஏன் நம் வேலைகள் எதுவும் நடக்கமுடியாது. அப்படி என்றால் ஏற்கனவே நாம் அவர்களிடம் பெற்ற கடனை நாம் திரும்பவும் அடைக்கின்றோம். அவ்வளவே. காரணமின்றி திருவருள் நம்மை இயக்கமுடியாது.
தர்மம் என்னும் போது நமது என்னம் எப்படி இருக்கின்றது, அதே சமயம் முற்பிறவி கடனை திருப்பி செலுத்துகின்றோம் என்று என்னும் போது நம் என்னம் எப்படி இருக்கின்றது. நமக்கு நாமே என்று என்னும் போது நமது என்னம் எப்படி இருக்கின்றது

  • உடல் நம் கண்களுக்கு தெரியும் வரை இந்த எண்ணங்கள் எல்லாம் தோன்றும். உடல் அற்றால் உயிர் ஒன்றே அப்போது நம் உயிருக்கு எவ்வாறு செய்வோமோ அப்படி அந்த உயிருக்கு அந்த உயிர் விரும்பும் வகையில் செய்யும் உதவியே ஜீவகாருண்யம்.
  •  மேலும் அந்த உயிருக்கு வினையினால் இந்த நிலை ஏற்பட்டதே  இன்று நம்மால் அதன் தேவை பூர்த்தி அடைந்ததே மீண்டும் தேவை ஏற்படும் போது இந்த உயிர் என்ன செய்யும் என்று எண்ணி அந்த உயிரின் தேவையை குறித்து திருவருளிடம் விண்ணப்பம் வைத்து அந்த உயிரின் தேவை பூர்த்தி அடைய வேண்டும் என்று வழிபடுவதே ஆகும். (இதை விரிக்கில் பெருகும். பெருகில் சுருங்கும்)
எவ்வுயிரும் பொதுவெனக்கண் டிரங்கியுப கரிக்கின்றார் யாவ ரந்தச்    
செவ்வியர்தஞ் செயலனைத்துந் திருவருளின் செயலெனவே தெரிந்தே னிங்கே 
கவ்வையிலாத்  திருநெறியத் திருவாளர் தமக்கேவல் களிப்பாற் செய்ய 
 ஒவ்வியதென் கருத்தவர்சீ  ரோதிடவென் வாய்மிகவு மூர்வ தாலோ.
 
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந் தம்முயிர்போ லென்னி யுள்ளே 
ஒத்துரிமை  யுடையவரா யுவக்கின்றார் யாவரவ ருளந்தான் சுத்த   
சித்துருவா யெம்பெருமா னடம்புரியு மிடமெனநான் தெரிந்தே னந்த 
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் சிந்தைமிக விழைந்த தாலோ.
காலந்தாழ்த்தாது, எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக்கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்த குணம் வந்தவன் எவனோ அவன் தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆண்டவனுமாவான்.

இதுவே சாதனம். இப்படி நீங்கள் அந்த ஆன்மாவுக்கு செய்யும் உதவியால் அந்த ஆன்மா இன்பம் அடைந்து உங்களை பார்க்கும் போது நீங்கள் அடையும் இன்பத்திற்கு அளவேது. இதுவே கடவுள் இன்பம். இதுவே தொடக்கம். இவ் விளக்கத்தையும், இன்பத்தையும் பலகால் (பல முறை) கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே ஜீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அடைந்து கடவுள் மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறியவேண்டும்.


இங்கு தான் நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். சன்மார்க்கத்திற்கு மட்டும் தான் சதனங்கள் ஒன்றும் வேண்டாம். சாதனம் ஒன்றும் வேண்டாம் என்பது

  • சரியை
  • கிரியை
  • யோகம்
  • ஞனம்.

நாம் சத்விசாரம் செய்யும் போது ஞானத்தில் யோகமாகிய (நிராசை) என்னும் 15-ஆம் படி உண்டாகிறது. ஆதலால் தான் வேறு சாதனம் வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.


ஆஹா, இவ்வளவு தான் விசயமா. இனி, அடி தூள் கிளப்பிடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் இதற்கு மேல் தான் திருவருளின் திருவிளையாடல் தொடங்கும். இதோ சில உதாரணங்கள்….


இதோ நம் சுத்த ஞானிகளின் அனுபவ விளக்க வார்த்தைகள்


1.திருஞானசம்பந்தர்:

      புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்

      தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

      முனிவு இலாது ஒர் பொருள் அது கருதலும்

      ஆறு கோடி மாயா சக்திகள்

      வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

      ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

      நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

      சுற்றம் என்னுப் தொல்பசுக் குழாங்கள்

      பற்றி அழைத்து பதறினர் பெருகவும்

      விரதமே பரம் ஆக வேதியரும்

      சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்

      சமய வாதிகள் தம்தம் தங்களே

      அமைவது ஆக அரற்றி மலைந்தனர்

      மிண்டிய மாயா வாதம் என்னும்

      சண்ட மாருதம் சுழிந்து அட்த்துத் தாஅர்த்து

      உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்

      கலா பேதத்த கடுவிடம் எய்தி

      அதில் பெருமாயை எனைப்பல் சூழவும்

      தப்பாமே தாம் பிடித்து சலியாத்

      தழலது கண்ட மெழுகு அது போலத்

      தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து……………


2.பட்டினத்தார்:


காதறுந்த ஊசியும் வாராது கடைகண்ணுக்கே……


என்ற ஒற்றை உடைந்த ஊசியை காண்பித்து கோவணம் கட்டி தெருவில் உருள வைத்தது திருவருள். பட்டினதார் வரலாறை படித்து பாருங்கள் அவர் அனுபவம் புரியும்.


3.ஹரிச்சந்திரன்:


மகாராஜாவான ஹரிச்சந்திரனை வெட்டியானாக ஆக்கியதும் திருவருள். ஹரிச்சந்திரன் கதை கேட்டே மகாத்மா காந்தி பொய் பேசுவதையே விட்டார். இவர் வரலாறை படித்து பாருங்கள் அவர் அனுபவம் புரியும்.


4.சிவவாக்கியார்:


என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே  
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்  
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே


அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,  
கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,  
புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,  
கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.


கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்  
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்  
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத  
சுத்தனாய் அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!


வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்?  
வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே,  
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்  
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே!


மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல்
குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும்
 
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே.


என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்?
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்  
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்  
என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே.




வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்  
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்  
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்  
சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே.


கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை  
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த்  
 தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே  
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே


ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே  
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்  
மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே


ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை  
காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே  
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே  
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.


ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே  
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்  
வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார்  
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.


சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே  
ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே  
வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே  
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.


வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர்  
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்,  
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே  
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே.


கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்  
அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்  
உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த்  
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.


ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்,  
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்  
ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்  
ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே


புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர்.  
செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்  
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்  
உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே


சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்  
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்  
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்  
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.


5.திருவள்ளுவர்


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்          
மனக்கவலை மாற்றல் அரிது.


தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை                                            
அஃதிலார் மேற்கொள் வது.


6.ஒளவையார்:

  •  1.9 உள்ளுணர்தல்.

எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை

உண்ணிலமைப் பெற்ற துணர்வு.                            (81)

பல்லூழி காலம் பயின்றரைன யர்ச்சித்து

நல்லுணர்வு பெற்ற நலம்.                                          (82)

எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே

நண்ணப் படுமுணர்வு தான்.                                      (83)

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்

பின்னைப் பெறுமுணர்வு தான்.                               (84)

காயக் கிலேச முணர்ந்த பயனன்றே

ஓயா வுணர்வு பெறல்.                                                  (85)

பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால்

கண்டங் குணர்வு பெறல்.                                            (86)

பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை

ஆராய்ந் துணர்வு பெறின்.                                           (87)

ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே

மோனத்தா லாய வுணர்வு.                                         (88)

ஆதியோ டோன்று மறிவைப் பெறுவதுதான்

நீதியாற் செய்த தவம்.                                                   (89)

காடுமைலயுங் கருதித் தவஞ் செய்தால்

கூடு முணர்வின் பயன்.                                               (90)


7.சிதம்பரம் இராமலிங்கம்:


மாயையாற் கலங்கி வருந்தியபோதும் வள்ளலுன் றன்னையே மதித்துன்  
சாயையாப் பிறரைப் பார்த்ததே யால்லாற் றலைவவே றெண்ணிய துண்டோ  
தூயபெற் பாத மறியநா னறியேன் துயரினிச் சிறுதுமிங் காற்றேன்                      
நாயகா வெனது மயக்கெலாந் தவிர்த்தே நன்றருள் புரிவதுன் கடனே.


8.ஜனகன்.


ஜனகனை ராஜரிஷி ஆக்கியதும் திருவருள் தான். இவர் அனுபவம் கிடைத்தால். மிகவும் நன்று. இவர் வரலாற்றை பார்த்தால் புரியும்.


மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பெரியவர்களின் அனுபவம் அனைத்தும் உங்கள் தெளிவிற்கே. ஏனென்றால், வினைக்கீடாய் திருவருள் அனைத்தையும் நடத்தும் போது அதில் நன்மையும், தீமையும் கலந்தே வரும். ஆதலால், வருகின்ற வினையை அறிந்து அதன் தன்மைக்கு ஏற்ப நடந்து முன் வினையை கழித்து பின் வினை ஏறாமல் காத்துக் கொள்வதற்கே. இந்த தெளிவு உங்களுக்கு இருக்கும் வரை உங்கள் வாழ்நாள் கூடத் தொடங்கும், இறப்பு தள்ளிக்கொண்டே போகும். இதற்கு நாம் மூன்று வார்த்தைகளை தெரிந்து, புரிந்துக் கொள்ள வேண்டும். அவை…

  • தனித்திரு  - நாம் யார் என்ற எண்ணம் எப்போதும் வேண்டும்

  • விழித்திரு - திருவருள் விளையாட்டை கவனமுடன் பார்த்து கொண்டிருப்பது

  • பசித்திரு.   - திருவருளை அடைவது எப்போது என்று பசியுடன் இருப்பது.

இந்த வார்த்தைகளின் தெளிவு நமக்கு கிடைக்கவேண்டுமானால் மற்றொன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். அது,


சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது தான் வந்து முற்றும்.


இதன் விளக்கம்

  • சந்ததம்                   = சந்தம் = சந்ததி = சரணம் என்பது ஒரு பாட்டின் முதல் தொடக்கம். அதுவே அதன் இறுதி வரை வரும்.     

  • வேதமொழி         = திருமந்திரங்கள்,
  • யாதொன்றும்     = நமக்கு எது வேண்டும் என்று நினைகின்றோமோ அது.

இதற்கு நமக்கு என்ன வேண்டும் என்று தெளிவு நமக்கு இருந்தால் போதும். இதை பிடித்தால் மட்டுமே அதுவே நமக்கு கிடைக்கும்.

  • இங்கே நமக்கு திருவருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் இந்த திருமந்திர பாட்டை பிடித்தால் நமக்கு வெற்றி நிச்சயம். இதோ அது..

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி   

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  •  இதை நாவசையாமல் உச்சரிக்க வேண்டும்.

சாகக்கல்வியின் முதல் படியாகிய சிற்சபை கடந்தால் மட்டுமே நம்மால் பொற்சபையையும், ஞானசபையையும் அடைய முடியும்.

  •  எல்லாம்வல்ல, யாதொரு ஒப்புயர்வில்லாத, யாவராலும் அடைதற்கு அரிதாகிய, யாவராலும் அடைதற்கு எளிதாகிய ஒரே உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே, யாதும் அறியாதிருந்த என்னை உண்மைக்கடவுள் ஒருவர் உண்டென்று அவர்பால் என்னை திருப்பிய ஆன்மாவுக்கும், அவர்பால் திருப்பி, அதைத்தேட தொடங்கியதும், அது குறித்த அனைத்து தகவல்களையும் இணையத்தில் இருக்க செய்த அனைத்து ஆன்மாக்களுக்கும், இதை எழுத்து வடிவமாக்க உதவி செய்து அதற்கான மென்பொருளாகிய அழகியை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிரக்கம் செய்ய உதவிய அழகி மென்பொருள் வடிவமைப்பில் உறுதுணையாக இருந்த அத்தனை ஆன்மாக்களுக்கும், இதை வாசிக்க இருக்கும் ஆன்மாக்களுக்கும், கேட்க இருக்கும் ஆன்மாக்களுக்கும், இவை அனைத்தையும் எனக்கு காண்பித்து கொடுத்த திருவருளுக்கும், ஒர் சிறு துரும்பையும் ஐந்தொழில் புரிய வைக்கும் எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளே, இந்த ஆன்மாக்களுக்கு, வையத்தில் உள்ள எல்லா நன்மைகளையும் வழங்கி அந்த ஆன்மாக்களின் விருப்பப்படி அவர்களை வாழ்வித்தருளல் வேண்டும் என்பதே இந்த ஏழை ஆன்மாவின் சிறு விண்ணப்பம். எனைக்காப்பதுன் கடனே.

திருச்சிற்றம்பலம்.



மீண்டும் பூக்கும்……

No comments:

Post a Comment