Saturday, November 5, 2016

நான் என்ற தன்னை அறிந்தால் …………………………………. (சன்மார்க்கம் (எ) உயிர் இயல்)


 
 
 
சன்மார்க்கமாவது நீயே நான் நானே நீ                                                                                    `               -       ஒழிவிலொடுக்கம் பாடல் எண் 57 பக்கம் – 69
சன்மார்க்கம் சகலகலை புராண வேத
     
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்
     
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
     
ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
      பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே.                                                                                                                    -      
சிவஞானசித்தியார்
 
 
'ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும்
வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்'                                          
-      ஔவையார்
 
 
 

சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.                                       

 -              சிதம்பரம் இராமலிங்கம்

என்னடா இது புதுசா இருக்கே அப்படின்னு நினைக்கிறீர்களா. ஆமாம் சார் உண்மை எப்பவும் புதிதாகத்தான் இருக்கும்.

சன்மார்க்கத்தை சிவஞானசித்தியார் தனது பாடலில் மிகதெளிவாக விளக்கியிருக்கின்றார். எல்லாவற்றையும் கற்று தெளிந்து அவற்றை கீழடக்கி மேலிருப்பதுவே சன்மார்க்கமாம் மேலும் அதுவே ஞான நன்மார்க்கமாம்.

இதைதான் வள்ளலாரும் சன்மார்க்கமாவது நீயே நான் நானே நீ என்று சொல்லி ஆத்மவிசாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

நான் என்ற தன்னை அறிந்தால் தான் நீ என்ற இறைவனை அறியமுடியும் என்று உணர்த்துகின்றார்.

ஆத்மவிசாரம் என்பது நான் என்ற சொல்லின் உண்மையான பொருளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முயற்சி.


ஆன்மா, தளை, வீடு, அறிவு


உடம்பு முதலிய அழியும் பொருள்களை ஆள்வது ஆன்மா.

உடம்பு, மனம் இவைகளைத்'தான்' எனக் கருதும் எண்ணம்

ஆன்மாவுக்குத் தளை.

அதனின்று விடுதலை பெறுவதுதான் வீடு (மோட்சம்).

அவ்வெண்ணத்தை ஏற்படுத்துவது அவித்தை.

எதனால் அவ்வெண்ணம் விலகுகிறதோ அது பேரறிவு (ஞானம்). 
 
-      சர்வசார உபநிடதம்

 

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு                                -      திருவள்ளுவர்

வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை         
 
-      சிவவாக்கியர்

தன்னை அறிந்தவனே சன்மார்க்கம் அறிந்தவன்                  -      சித்தர்

தன்னை அறியும் அறிவை பெறுவதே சன்மார்க்கத்தின் முதல் படி. ஆக, நான் (எ) ஆன்மா (எ) தன்னை பகுத்துப்பார்த்தால் தான் அதன் இயல்பை நம்மால் உணரமுடியும். சரி வாருங்கள் பகுத்து பார்த்துவிடுவோம். எப்படி எனில் நம்ம சிதம்பரம் இராமலிங்கம் கூறியபடி. அப்படி அவர் என்னதான் கூறியிருக்கின்றார், பார்ப்போம் வாருங்கள்.

நான்கு புருஷார்த்தங்களை மட்டுமே அவர் சுவற்றில் எழுதி இதை தடைபாடாது விசாரியுங்கள் என்று கூறிவந்தார். அவையே ஜீவகாருண்ய ஒழுக்கம். எதற்காக இதை கடைசியில் வலியுறுத்திவந்தார். அவை

1.   இந்திரிய ஒழுக்கம்

2.   கரண ஒழுக்கம்

3.   ஜீவ ஒழுக்கம்

4.   ஆன்ம ஒழுக்கம்

1.   இந்திரிய ஒழுக்கம்  - புலனறிவு           - புலனனுபவம்       - நட்சத்திர ஒளி
2.   கரண ஒழுக்கம்      - மனஅறிவு           - மனஅனுபவம்       - சந்திரன் ஒளி
3.   ஜீவ ஒழுக்கம்        - உயிர்அறிவு         - உயிரனுபவம்       - சூரியன் ஒளி
4.   ஆன்ம ஒழுக்கம்     - உண்மைஅறிவு     - உண்மைஅனுபவம் - அக்னி ஒளி.
நான் என்ற ஆன்மா என்ற தான் எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு விளக்குகின்றார் என்பதை பாருங்கள்.

ஆக ஆன்மா என்பது தன் உண்மையான ஒளியை (எ) அறிவை (எ) அனுபவத்தை மறைத்து பொய் ஒளியை (எ) அறிவை (எ) அனுபவத்தை நமக்கு காண்பித்து கொண்டிருக்கின்றது என்பதை கேட்டு, சிந்தித்து, தெளிந்து, உணர்ந்து அதிலே அழுந்தாமல் மீண்டு மேலேறிவர வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

இதன் தாத்பரியம் ஆன்மா தன் ஒளியை உயிரில் பிரிதிபலிக்கின்றது, உயிர் அந்த ஒளியை மனதில் பிரிதிபலிக்கின்றது மனம் அந்த ஒளியை புலன்களில் பிரிதிபலிக்கின்றது என்பதே.

ஆக, அக்னி ஒளி சூரிய ஒளியாகின்றது,

சூரியன் ஒளி சந்திரன் ஒளியாகின்றது,

சந்திரன் ஒளி நட்சத்திர ஒளியாகின்றது

ஒரே ஒளியே பல பரிமாணங்களில் மாறுபட்டு பல ஒளிகளாக தோன்றி நம்மை மயக்கும் என்பதை உணர சொல்கின்றார். இதை உணர்த்தவே பூச நன்னாளில் ஞானசபையில் ஜோதி தரிசனம் நடத்த செய்தார். ஜோதி எப்படி காண்பிக்க படுகின்றது என்பதை அறிந்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

மேலும், ஆன்மாவே நித்தியம் மற்ற மூன்றும் அனித்தியம் என்பதை உணர்ந்து அனித்தியமாகிய உடல், மனம் மற்றும் உயிர் இவற்றை நித்தியமாகிய ஆன்மாவில் நிலைக்க செய்வதே சாகக்கல்வியின் இயல்பென்றும் இதுவே ஆன்ம விசாரம் என்றும் இதை அடைவதே சன்மார்க்கத்தின் லட்சியம் என்றும், சாகாதவனே சன்மார்க்கி என்றும், இதை எல்லோரும் அடைய வேண்டுமென்றும் இயம்புகின்றார்.

பிண்டமும் அண்டமும் ஒன்றே என்பதை படி ஒன்றி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அண்டத்தில் எவ்வாறோ அவ்வாறே பிண்டத்திலும் உள்ளது என்பதை

புறப்புறம்

புறம்

அகப்புறம்

அகம்

என்றுதான் வந்து முற்றும் என்று உணர சொல்கின்றார்.

நித்தியமான, உருவமும், அருவமும், உருஅருவான ஆன்மா (எ) நான் (எ) உண்மை அறிவு தன்னால் எதையும் செய்து கொள்ளமுடியாத ஒன்று. அதனால் அது இயங்குவதற்கு அதற்கு உயிர் என்ற அனித்திய பொருள் அதனோடு சேர்க்கபட்டது. எப்படி எனில் தன் அறிவின் ஒரு சிறு பகுதி அந்த உயிருக்கு கொடுக்கப்பட்டது. உயிர் சூட்சுமத்தில் இயங்குவதற்கு அதற்கு மனம் என்ற ஒன்று சேர்க்கப்பட்டது .எப்படி எனில் உயிர் தன் பெற்ற அறிவில் ஒரு பகுதியை மனதிற்கு கொடுத்தது. உயிர் அருவமானதால் அதற்கு உருவம் படைக்கபட்டது. எப்படி எனில் மனம் தான் பெற்ற அறிவில் சிறு பகுதியை உடலுக்கு கொடுத்தது.

தாத்பரியம் யாதோவெனில் ஒன்றில் ஒன்றை கொடுக்க ஒன்று வந்தது

அகம்         -      ஆன்ம அறிவு -      கோடி சூரியபிரகாசம்

அகப்புறம்    -      உயிர்  அறிவு -      ஒரு சூரியபிரகாசம்

புறம்         -      மன அறிவு   -      சந்திர பிரகாசம்

புறப்புறம்     -      புலன் அறிவு  -      நட்சத்திர பிரகாசம்

எப்படி சாத்தியமெனில் பிரிதிபலிப்பு (reflection) எப்படி சூரியன் தன் ஒளியை சந்திரனில் பிரிதிபலித்து ஒளிர்கின்றதோ அப்படியே. அண்டத்தில் எவ்வாறோ பிண்டத்திலும் அவ்வாறே.

கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ள இடங்கள்

அண்டத்தில் -        அக்னி,       சூரியன்,      சந்திரன்      மற்றும் நட்சத்திரங்கள்.

பிண்டத்தில்   -      ஆன்மா,      உயிர்,        மனம்        மற்றும் புலன்கள்

காரணத்தாலுள்ள இடங்கள்

அண்டத்தில் -        பரமாகாசம்.

பிண்டத்தில்   -      புருவமத்தி

காரணகாரியத்தாலுள்ள இடங்கள்

அண்டத்தில் -        மின்னல், இடி.

பிண்டத்தில்   -      விந்து, நாதம்.

ஆக, இந்த பத்து இடங்களிலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலும், காரணத்தாலும், காரணகாரியத்தாலும் உள்ளது.

சித்தர்கள் கண்ட எட்டும் இரண்டும் இதுவல்லவோ. உங்கள் விளக்கத்திற்காக காரியத்தாலுள்ள 4 + 4 = 8 இடங்களும்,

முதல் இடமாகிய காரணத்தாலுள்ள இடங்கள்            -     

அண்டமாகிய பரமாகசத்தில் ஒன்றாய் கூடியிருக்கின்றன, அதேபோல் பிண்டத்தில் புருவமத்தியில் ஒன்றாய் கூடியிருக்கின்றன.

இரண்டாமிடமாகிய   காரணகாரியத்தாலுள்ள இடங்கள்   -     

மின்னலில் நான்கும் இடியில் நான்குமாய் கூடியிருக்கின்றன, அதேபோல் பிண்டத்தில் விந்துவில் நான்கும் நாதத்தில் நான்குமாய் கூடியிருக்கின்றன.

ஆக, 8 + (1 + 1) 2 =  10 ஆதலால் தான் எப்போதும் நமது மனதை புருவமத்தியின் கண்ணே செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இந்த 8 ஐ குறிப்பதற்காகவே ஞான சபையை எண்கோண வடிவில் அமைத்திருக்கின்றார்.

சரி இதையெல்லாம் அடைவதற்கு சாதனம் யாதோவெனில் : -

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணுதல் வேண்டும் என்கின்றார். இந்த எண்ணம் வந்தவனே ஞான சபையின் வாசலில் நிற்க தகுதியானவன் என்றும் பின்னும் நன்முயற்சியாலே மேலேறிவர இயலும் என்றும் இயம்புகின்றார். மற்றவர்களெல்லாம் ஞான சபையின் முன்னும், பின்னும், சுற்றியும், அலைந்தும் வாயில் காணாது தவிப்பார்கள் என்று தயவினால் இயம்புகின்றார்.

சரி சற்று விளக்கமாக பார்க்கலாம்,

பொதுவாக பார்ப்பது என்பது என்ன :-

தனக்குள்ள ஆகாரத்தை பிறருக்கு கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடப்பதல்ல. வந்தவர்கள் தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தை கொடுத்தும், தாங்குபவர்களாகில் முயற்சித்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து தான் அதிசியமின்றி நிற்றல். அதுவுமில்லையென்றால் பச்சாபத்தோடு இறைவனிடம் விண்ணப்பிப்பது.

பரோபகாரம் என்பது என்ன :-       தன் சக்தியின் அளவு உயிருக்கு உபகரித்தல். நம் சக்தியின் அளவு நமக்கு நன்றாகவே தெரியும்.

பேதம் அற்று பார்ப்பது என்பது என்ன :-   

அண்ட சராசரங்களையும் தன் திருவருட்சத்தியால் இயக்கி கொண்டிருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அப்படியென்றால் நம்மையும், நம்மை சுற்றியிருக்கின்ற எல்லோரையும் இயக்குவது திருவருட்சத்தி. நம் சுதந்திரத்தால் நாம் இயங்குவதாய் நாம் நினைத்து கொள்வதால் நமக்கு பேதம் தோண்றுகின்றது. அதனால் தான் தன் தற்சுதந்திரத்தையும், ஜீவசுதந்திரத்தையும், போகசுதந்திரத்தையும் திருவருளிடம் ஒப்படைத்து விடுகின்றார். இனி தனக்கு யாதொரு சுதந்திர தோற்றமும் இந்த உலகத்தில் உள்ள பொருட்களிடம் தோண்றாது என்று திருவருளிடம் சத்தியம் செய்கின்றார். அப்படியென்றால் எல்லா உயிர்களையும் இயக்கும் திருவருள் என்னையும் இயக்கட்டும். திருவருள் நம் வினைக்கீடாய் நம்மை இயக்கட்டும். அதில் வருவது அனைத்தும் திருவருள் சுதந்திரத்தால் வந்தது என்று அதை அனுபவித்து தெளிந்திருப்போம். நம்மைப் போலவே எல்லா உயிர்களையும் திருவருள் அவர்கள் வினைக்கீடாய் இயக்குகின்றது என்பதில் தெளிந்து

பாவம் நீயும் என்னைப்போல் ஏழை என்று அறிந்து அவர் துன்பத்தை நிவர்த்திக்க துணிவதே ஜீவகாருண்யம் இந்த ஜீவகாருண்ய த்தினால் திருவருள் பதிந்து அறிவு விளங்கும். இதுவே ஆன்ம நேய ஒருமைப்பாடு என்ற எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணுதல்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னது இதனால் தான்.

வாசி யோகம் (மூச்சு கலை அல்ல)

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி

வந்துபோகும் கணக்கை முடி

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி

வெந்துசாகும் பழக்கம் கழி

வீணே கசியும் கவனம் வளிமேல்பூண

நசியும் மரணம்

திருப்பி மனத்தை வாசியில் பூட்ட

திறக்கும் அமுத வாரி

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்திருத்த

உடம்பு ஒளிரும் ஒளியும் வந்து

பிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோக
முந்திச்செல் வாசியோக வழி


-    நன்றி தென்றலாரே!


 

விதியை வெல்லுவது எப்படி?


விதியை மதியால் வெல்லாம் என்பது பழமொழி இங்கே மதி என்பது இடகலை (இடது மூச்சல்ல) பற்றியது. அதாவது இடகலை பற்றி எறினால் விதியை வெல்லாம் என்பது இதன் தத்துவம்.                                                                                         

 — பதஞ்சலி மகரிஷி

 

திருவிளங்கச் சிவயோகச் சித்தியெல்லம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்

தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கவொளி சிறந்ததிரு விளக்கே

உருவிளங்க வுயிர் விளங்க யுணர்ச்சியது விளங்க

உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்

மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே

பின்குறிப்பு:-

ஆகா எல்லாம் தெரிந்துவிட்டது என்று திருவருள் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள். தலையிட்டீர்கள் என்றால் எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் இருப்பார்.(கவுண்டமணி சொல்வதைப்போல் “டேய் நீ எந்த எந்த டைப்ல முழிய வச்சிக்கிட்டு எப்பிடி எப்பிடி எல்லாம் ஆக்ட் குடுப்பனு எனக்குதான்டா தெரியும். செய்யறதையும் செஞ்சுபுட்டு ஒன்னும் தெரியாதவன் போல் நிக்கறத பாரேன்”  அப்புறம் அவதிபட வேண்டியதுதான். ஆதலால் ஆனந்தத்தோடு, அமைதியாக, திருவருளின் விளையாட்டை அனுபவித்து வழிபடுங்கள். இதில் அனுபவம் பெற்றால்தான் திருவருளை இயக்கும் தலைவனாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரகிய நீயை அறியமுடியும்.

.

 

 

 

 

 

 

திருச்சிற்றம்பலம்

மீண்டும் பூக்கும்….

Sunday, May 3, 2015

தயவு



4.        தயவு

இது வரை நாம் பார்த்ததை விட மிகவும் முக்கியமான ஒன்றை இறைவனின் சொருபத்தை, வண்ணத்தை, இயல்பை, யாவரும் அறிய முடியாத இறைவனை ஒப்புயர்வில்லாத தலைவனை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்த போகின்றோம்.

அனைத்துமாகிய, அனைத்துள்ளும் விளங்குகின்றவனாய் அனைத்தையும் இயக்கின்றவனாய், ஐந்தொழிலையும் புரிபவனாகிய இறைவன் யார்? என்ற கேள்வி நம்முள் எப்போதும் சுழன்று கொண்டிருக்கும் ஒன்று. இதற்கான விளக்கத்தை நம் வல்லவன் எவ்வளவு அழகாக நமக்கு வெளிப்படுத்துகின்றார் என்பதை நாம் காண்போம்.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை 

தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்,


எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்:

நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி 

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்.

ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அதுவே ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம் (இறைவன்).

மீண்டும் அதே மந்திரமா என்று கேட்பது புரிகின்றது. தனிப்பெருங் கருணை

1.  தனி

2.  பெரும்

3.  கருணை

இந்த மந்திரத்தை சற்றே பிரித்துப் பார்த்தால் தான் நமக்கு நம் வல்லவன் எவ்வாறு உண்மையை இறைவனின் சொருபத்தை தனது உண்மையறிவாகிய அனுபவத்தில் ஆனந்த இன்பத்தை கண்டு நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடையவேண்டும் என்று குறிப்பிக்கின்றார் என்பது புரியும்.

சரி வாருங்கள் சற்றே விளக்கமாக பார்ப்போம்…

கருணை

என்ற வார்த்தையை நாம் கேட்டிருப்போம் இதைத்தான் நாம் உலகியலில் அன்பு என்றும் ஜீவகாருண்யம் என்றும் அருள் என்றும் புரிந்திருக்கின்றோம். இந்த கருணையில்லை என்றால் எந்த அண்டத்திலும் எதுவும் நடைபெறாது என்பது நிதர்சனம். 

உதாரணத்திற்கு உங்கள் மனைவியிடம் காபி கேட்கின்றீர்கள் அவர் கருணை இருந்தால் தான் உங்களுக்கு காபி கிடைக்கும். அவரிடம் கருணை இல்லையென்றால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். இதைப்போல்தான் உலகியலில் நடைபெறும் அனைத்து  நிகழ்வுகளுக்கும் அடிப்படை இந்த கருணை மட்டுமே. மனித பிறவி எடுத்த, எடுத்திருக்கின்ற, எடுக்கப்போகின்ற எல்லா உயிர்களுக்கும் இதுவே பொது. அவர் அவர் வினைக்கு ஏற்ப மாறுபடும்.  

பெரும்

கருணை என்ற வார்த்தையே மிகவும் வலுவானது என்று பார்த்தோம் அந்த கருணையுடன் பெரும் என்ற வார்த்தையின் அர்த்ததை சேர்த்து பார்க்கும் போது அதன் வலிமையை எவ்வாறு உணருகின்றீர்கள் என்று பாருங்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால் உலக உயிர்கள் மட்டுமின்றி அண்டான்டங்களையும் தன் பெரும் கருணையினால் கட்டுப்படுத்தி, இயக்கி கொண்டிருப்பது என்பது புரியும்.

நானே அனைத்தும் அறிந்தவன் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களை (இறைவன் வாழும் வீடு) எவ்வாறு இறைவன் தன்னில் இருந்து தனிமை படுத்துகின்றான் என்று பாருங்கள். உண்மை உங்களுக்கு புரியும்.

தனி

பெரும் கருணையிலே நம்மை எல்லாம் உதறிவிட்ட இறைவன் மேலும் ஒரு படி போய் தனி என்ற வார்த்தையை சேர்த்ததால் என்ன என்பது புரிகின்றதா. பெரும் கருணை என்றால் ஓன்றே அதற்கு வேறு ஒரு ஒப்பில்லாதது என்றும் ஒன்றே ஒன்று தான் அண்டாடங்களையும் அதனுள்ளிருப்பவற்றையும் தன் தனி பெரும் கருணை வல்லபத்தால் ஐந்தொழில்களாலும் நடத்திக்கொண்டிருப்பதும் புரியும்.

இப்போது புரிகின்றதா  இப்படி எல்லாவற்றையும் தன் தனிப்பெருங்கருணையினால் இயக்கிக் கொண்டிருக்கின்ற இறைவனின் சொருபத்தை எப்படி சொல்வீர்கள், அவன் வடிவம் என்ன என்றுதான் கூறமுடியுமா. அந்த வடிவம் தான்

தயவு

எத்தனை அற்புதமாக இறைவனின் சொருபத்தை தன் அனுபவத்தின்கண் பெற்றார் என்பதை அவர் வார்த்தையை மீண்டும் படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளமுடியும். இதோ…

எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்,

எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

சரி இந்த இறைவனின் தயவுக்கு ஒரு சிறு சாட்சியை பார்ப்போமா. எல்லா ஞானிகளும் சொல்வது என்னவென்றால் மனிதர்களாக பிறந்தவர்கள் யார் வேண்டுமானால் இறை நிலையை அடைய முடியும் என்பதைத்தான். அது எப்படி மனிதர்கள் மட்டும் பெறமுடியும் என்று என்னும் போது தயவு என்ற அறிவு என்பது மனிதர்களிடம் மட்டுமே மற்ற உயிர்களைகாட்டிலும் சற்று மிகுந்திருக்கின்றது. இந்த வார்த்தையை சற்று ஊன்றி பார்க்கவும். அப்போதுதான் இறைவனின் தனிபெருங்கருணையை தெரிந்து கொள்ளமுடியும். இதன் தாத்பரியம்

தன்னிடமுள்ள மொத்த கருணையையும் உலகத்தில் படைத்த, படைக்கப்பட்ட,  படைக்கப்படப்போகின்ற அத்தனை உயிர்களிலும் தனக்கென்று மீதம் ஏதும் வைத்துக்கொள்ளாமல் அத்தனை தயவையும் எறும்பு முதல் யானை வரை உள்ள அத்தனை உயிர்களுக்கும் கொடுத்து அந்த உயிர்கள் அனைத்தும் இன்புற்று தன் விருப்பப்படி வாழ தற்சுதந்திரத்தையும் கொடுத்து அனுபவம் பெற்று மேலேறி வர வழிவகையும் செய்து கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கின்றவர், தன் சாயலாக இறைவன் மனிதனை படைத்தார் என்பது தன் தயவை மனிதர் அறியும்படி செய்திருப்பது தான். மற்ற உயிர்களுக்கு தயவு என்பது என்னவென்று புரியாது ஆனால் அவைகளுக்கு நன்றி என்பது என்னவென்று நன்றாகவே புரியும். மனிதர்களுக்கு அது புரியாத மொழி. உங்கள் அறிவை சற்று சிந்திக்கத் தூண்டினால் உங்களுக்கே அது புரியும்.

இவை அனைத்தையும்விட மிக முக்கியமானது இவை அனைத்தையும் தான் தான் செய்கின்றோம் என்பதை அணு அளவேனும் பிறர் அறியாமல் செய்துக்கொண்டிருப்பது அதுவும் சலிப்பில்லாமல். (நம் தயவு எல்லைக்குள் உட்பட்டது ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை, அப்புறம் போடா - உண்மைதானே)

இதோ நமது வல்லவனின் அனுபவக்குறிப்பு

எங்கே கருணை யியற்கையி னுள்ளன

அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

அருளென்பது = கடவுள் தயவு, கடவுள் இயற்கை விளக்கம்

ஜீவகாருண்யமென்பது = மனிதர்கள் தயவு, மனிதர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்

இதனால் தயவைக்கொண்டு தயவைப் பெறுதலும். விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தை பெறுதலும் கூடும்,

வெறொன்றினால் பெறக்கூடாமை அனுபவம் 

ஆகலினால் தயவைக் கொண்டே தயவை பெறுதல் கூடும்,

வெறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். 

இதற்கு வேறு பிரமானம் வேண்டாமென்று அறிய வேண்டும்.

இங்கே தான் நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும் நம் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோமோ அவ்வாறே நாம் வளர்க்கின்றோம் அவர் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப. இயற்கையிலேயே நம் குணம் அந்த குழந்தையிடம் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தன் நிலையை மற்றிக்கொள்ளும் வல்லபமும் அதற்கு இயற்கையிலே கொடுக்கப்பட்டிருக்கின்றது தன் அறிவுக்கு எது சரி என்று படுகின்றதோ அதன் படியே அந்த குழந்தை செயல்படும். இதை நாம் மாற்றமுடியுமா.

இதை போல்தான் இறைவன் தன் குணமாகிய தயவை அப்படியே தன் குழந்தைகளாகிய மனிதர்களிடம் கொடுத்திருக்கின்றார். கொடுத்த அந்த குணத்தை தன் அறிவால் (திரையால்) மறைத்தும் விடுகின்றார். அனுபவம் என்னும் அறிவால் மட்டுமே அதை திறக்கவும் வைக்கின்றார். 

ஆகவே இயற்கையிலே தயவே வடிவான (இறைவனின் சொருபமான) நாம் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த தயவை மறந்து செயற்கையிலே உழன்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்துக் கொண்டால் போதும். அதன் பிறகு நம்முள் இருக்கும் தயவை நாம் அறிய தொடங்கினால் அதன் எல்லையில் நாம் இறைவனாவோம் என்பது நிதர்சனம். 

தயவு என்பது 

1.     !!! அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாக்காது நடத்தலே தயவு !!!. பிறர் செய்யினும் பொருத்தல் வேண்டும் (தான் கெடாமல் ) !!! 

2.     !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!

என்பதே நம் வல்லவனின் கோட்பாடு. என்பதை நாம் புரிந்தால் போதும்.


வல்லவனின் இந்த தயவின் விளக்கத்தை தயவால் (என்னைப்போல்) அறிந்தவர்கள் சத்தியமாக அருட்பெருஞ்ஜோதியின் வசமாவார்கள். அல்லாதவர்கள் வீணிலே உழன்று மீண்டும் தயவால் இந்த அனுபவம் பெற்று அருட்பெருஞ்ஜோதியின் வசமாவார்கள் என்பது திண்ணம். அறுதியிட்டு இதை கூறுவதற்கு காரணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற என் அண்ணன் சிதம்பரம் இராமலிங்கத்தின் உண்மை அனுபவத்தை நன்றாக பல முறை வாய்விட்டு படித்து பாருங்கள் அப்போதுதான் தயவு என்றால் என்னவென்று விளங்கும்.

என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது  
யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. 


உங்களிடம் தயவு உள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள ஒரு சிறு அளவு கோலையும் அவர் வகுத்திருக்கின்றார். இது வைத்து நீங்கள் உங்கள் தயவை அறிந்து அதன் படி மேலேற முயற்சி செய்யுங்கள் அவசியமான தயவு இருக்க வேண்டியது மிக முக்கியம்.

அளவு கோல்


1.  அமைதி


2.  ஆனந்தம்


3.  சகிப்புத்தன்மை


4.  அன்பு


5.  நிராசை


6.  சாந்தம்


நீங்கள் எல்லோரும் நம்பமாட்டீர்கள் இதோ உங்களுக்கான விளக்கம்

குணங்கள் சிறந்தன குற்றங்க ளற்றன

மணங்கள் விளங்கின வாழுவுக ளோங்கின

பிணங்க ளெல்லாமுயிர் பெற்றேழுந் தோங்கின

இணங்க அருட்பெருஞ் ஜோதியா ரெய்தவே

பார்த்தீர்களா இது நம்ம வல்லவன் அடித்த final வெற்றி six-ஐ இதெல்லாம் நம்மகிட்ட இருக்கு ஆனா இல்ல என்ற வடிவேல் comedy நிலை தான் நம்முடயது.

சரி இத்தனை தெரிந்த நாம் சன்மார்க்கி என்று சொல்லிக்கொண்டு என்ன செய்துக் கொண்டிருக்கின்றோம் தயவை வெளியே தேடிக்கொண்டு தயவில்லாமல் எல்லா உயிர்களுக்கும் இம்சை செய்துக் கொண்டிருக்கின்றோமா இல்லையா என்ற கேள்வியை உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் உண்மை விளங்கும். இப்படிப்பட்ட தயவின்மையை வைத்துக் கொண்டு சன்மார்க்கி என்று சொல்லிக் கொண்டு ஆயிரம் ஆண்டுகள் திரிந்தாலும் தயவு விளங்காது. அப்படி ஆனால் தயவு விளங்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்குங்கள்.

தயவே வடிவான நாம் நம்மிடம் இருக்கும் தயவை மறைக்கும் எண்ணங்கள் தோன்றும் போது தயவின் நினைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டால் தன்னால் உங்களுள் இருக்கும் தயவு வெளிப்படத் தொடங்கும் மேலே சொன்ன ஆறு குணங்களும் உங்களுக்குள் தோன்றும். இந்த ஆறாம் நிலையான சாந்தம் (ஷண்முகமும் இதுவே, ஆறறிவும் இதுவே) உங்களுக்குள் நிலைத்தால் அதுவே துரிய நிலை இந்த நிலையே ஆன்மாவாகிய நம்முடைய நிலை அதன் பிறகே அருட்பெருஞ்சோதியின் நிலையாகிய சுத்த சிவம் கடந்த அதீத பெருநிலையை அடைவோம். ஆதலால் காலந்தாழ்தாது தயவான நம் இயல்பை நம் தயவை நம்முள் தேடத்தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.

சரி எப்படி என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் அதற்கான விளக்கம்


ஈர்ப்பு விசை = ஈர்ப்பு சக்தி

இந்த சக்தியே அண்டாடங்களையும் அதனுள் இருக்கும் அனைத்தையும் தன் நிலையில் இயல்பு மாறாமல் காலம் நேர வண்ணம் இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிவியல் பூர்வமாக ஒரளவு நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த சக்தி இல்லை என்றால் அனைத்தும் ஒன்றிலே ஒடுங்கிவிடும்.

உலகியல் உதாரணம்

இரும்பாகிய காந்தம் இரும்பை மட்டுமே ஈர்க்கும் வேறு பொருளை ஈர்காது காரணம் இரும்பின் தண்மை வேறு மற்ற பொருட்களின் தண்மை வேறு. ஆதியிலே அனைத்தும் மூலக்கூறு ஒன்றானாலும் அதன் கலப்பு விகிதம் வேறுபடுவதால் ஈர்ப்பு சக்தி இருந்தும் செயல்படாமல் இருக்கின்றது. ஆகலால்

தயவே தயவை ஈர்க்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

தயவுள்ளவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை நம் வல்லவன் எவ்வாறு குறிப்பிக்கின்றார் என்பதை பாருங்கள்

தயவுள்ள சமுசாரிகளுக்கு உலகியல் லாபம்:

1.  கோடையில் வெயிலும் வருத்தாது,

2.  மண்ணும் சூடு செய்யாது,

3. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி,     பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா,

4. விடூசிகை* விஷக்காற்று விஷசுரம் முதலிய  அசாத்திய பிணிகளுமுண்டாகா,

5. அந்தச் தயவுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள்,

6. அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள்,

7.  தயவுள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும்

8.  வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும்,

9.  உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும்,

10. சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள்,

11. துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள்,

12. தயவுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.

மேலும் மிக முக்கியமாக,

1.  ஆகாரம்,

2.  நித்திரை,

3.  மைதுனம்,

4.  பயம் 

என்பவைகளால் தடைபடார்கள்.

அவர்கள் தேகத்திற்கு

1.  சாயை,

2.  வியர்வை,

3.  அழுக்கு,

4.  நரை,

5.  திரை,

6.  மூப்பு,

7.  இறப்பு முதலிய குற்றங்கள் உண்டானவல்ல என்னும் சாக பெருநிலையும் அடைவார்கள்.


பார்த்தீர்களா தயவுள்ளவர்களுக்கு தயவு எப்படிப் பட்ட அரணாக விளங்குகின்றது என்று சத்தியமாக கொடுக்கப்பட்டிருக்கும் போது, இவற்றை மீறி  நமக்கு நடைப்பெற்றால் தயவு நமக்கு எவ்வளவு இருக்கின்றது என்பதை நாம் சற்று சிந்தித்து பார்த்து உண்மை நிலையினை உணர்ந்து, மேற்சொன்ன உண்மை தயவை

!!! அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாக்காது நடத்தலே தயவு !!!. பிறர் செய்யினும் பொறுத்தல் வேண்டும் (தான் கெடாமல் ) !!!

!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!


என்னும் உண்மையை எல்லோரும் உணர்ந்து மேற்சொன்ன எல்லா நலங்களும் பெற்று சாகாபெருநிலையினை எல்லோரும் அடைந்து ஜீவன் முக்தனாக வேண்டும் என்ற சிதம்பரம் இராமலிங்கம் என்ற ஜீவன் முக்தனின் சத்திய வார்த்தையில் சத்தியம் உள்ளது என்பதை ஏதும் அறியாத எனக்கு உண்மை அன்பால் உணர்த்தி, எதிலும் மயக்காமல் உண்மை அறிவால் சத்தியமான அவர் வழியை காண்பித்து என்னைப்போல் நீயும் அடைவாய் என்று  இந்த ஏழை ஆன்மாவின் உள்ளம் தெளிவித்து அனுபவமே முக்திக்கு படிகள் என்று அறிவித்து படிகளெல்லாம் விரைந்து கடந்துவா என்று உலகியல் பள்ளியில் என்னை வருவித்து, வாழ்வித்து அருளிக்கொண்டிருக்கும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் தயவுக்கு அளவில்லா தென்டனிட்டேன், இடுகின்றேன், இடுவேன். என் அண்ணனைப் போல் நீங்களும் அவர் வழியில்

உண்மை அன்பு

உண்மை இரக்கம்

உண்மை அறிவை பெற்று

உண்மை வாழ்வியலில்

உண்மை நிலையினை

அடைந்திட வேண்டும் என்பதே இந்த ஏழை ஆன்மாவின் விண்ணப்பம். எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் அவர் அவர் வண்ணத்திற்கு ஏற்ப விளக்கும் என்பதில் யாதொரு சந்தேகமில்லை. இது சத்தியம்.




உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி

!!! வான்பற்றி நின்ற மறைபொருள் 
தான்பற்றி நிற்க தலைபடும் தானே !!!

 (அதிசூட்சுமமும் இதில்தான் அடங்கியிருக்கின்றது 
தயவு விளங்கினால் தான் உண்மை விளங்கும்)

??? இந்தவாசல் ஏழைவாசல் எம்பிரான் இருக்கும் வாசல் 
 யாவர் காண வல்லரோ ???



திருச்சிற்றம்பலம்.